Thursday, April 12, 2012

நந்தன வருஷ பலன்கள் - மீனம்

மீனம்:
உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன ஆண்டு:

இந்த ”நந்தன” ஆண்டில் குரு பகவானால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.
இந்த ஆண்டு உங்களின் தைரிய ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.
பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.
இந்த ஆண்டு முற்பாதியில் உங்களின் சப்தம ராசியில் வலம் வரும் சனி பகவான், பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும்.
பிற்பாதி முதல் ஆண்டு இறுதி வரை அஷ்டம சனி பகவானாக பவனி வருகிறார் சனி பகவான். இதனால் வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். "என்ன நடக்குமோ?' என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும். "வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமே...' என்று தவித்த விவகாரங்களில் கடைசி தருணத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், "மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.
விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதே அந்த வெற்றிக்குக் காரணம். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை "பைரவாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.

No comments: