Thursday, April 12, 2012

நந்தன வருஷ பலன்கள் - தனுசு

தனுசு:

உங்களைப் பற்றி:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:


இந்த ”நந்தன” ஆண்டில் குரு பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். அன்னப் பறவை போல நல்லது - கெட்டது இரண்டையும் பகுத்து ஆராய்ந்து செயல்படுவீர்கள். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். சிலருக்கு "நூதன கிரஹப் பிரவேசம்' செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் "குற்றமற்றவர்' என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். மற்றபடி அவ்வப்போது ஏற்படும் மனச் சோர்வை நீக்கிக் கொள்ள, "நம:சிவாய' என்ற ஐந்தெழுத்தை ஓதவும். இந்த ஆண்டு உங்களின் அயன, மோட்ச, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ராகு பகவான். இவர் உங்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் அவசர புத்தியைக் கொடுப்பார்; எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை. சிவபெருமான் துணையினால் தீமைகளிலிருந்தும் தீயவர்களிடமிருந்தும் எளிதில் மீளலாம். இதற்கான தெளிவை, "நம: சிவாய' ஜபம் தருவது நிச்சயம். இந்த ”நந்தன” ஆண்டு முதல் பாதி வரை உங்களின் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இந்த ராசி வாசகர்களில் சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு பிற்பாதி உங்கள் லாபஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார் சனி பகவான். இவர், உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானத்தைத் தருவார்; மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும்; அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.
 
பரிகாரம்: "ஐந்திற்கு இரண்டு பழுதில்லை' என்றொரு பழமொழி உண்டு. "நம: சிவாய' என்ற ஐந்தெழுத்தே வேத ஸாரம். "சிவ' என்ற இரண்டெழுத்தும், ஐந்தெழுத்துக்கு நிகரான புண்ணிய பலன்களை ஐயமின்றித் தரும் என்பதையே இந்த முதுமொழி வலியுறுத்துகிறது. ""சிவ' என்னும் திருநாமத்தால் தீவினைகள் மாளும்'' என்று தமிழ் மறையான "திருமந்திரம்' உரைக்கின்றது. எப்போதும் சிவ நாமம் ஓதுங்கள்! இந்த எளிய பரிகாரம், பெறற்கரிய நற்பலன்களைப் பெற்றுத் தருவது உறுதி.

2 comments:

Anonymous said...

Thanks! Thanks! Thanks!

Anonymous said...

Thanks!